கர்நாடகாவில் ரஜினிகாந்த் போஸ்டர்கள் கிழிப்பு.. கன்னட அமைப்பினர் ஆக்ரோஷம்
பெங்களூர்: கர்நாடக மாநிலம், ஹாசனில், முத்தூட் பைனான்ஸ் விளம்பர பேனரிலிருந்த நடிகர் ரஜினிகாந்த் போட்டோக்களை கிழித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகா தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று முதல் தினமும் தலா 12 ஆயிரம் கன அடி தண்ணீரை 20ம் தேதிவரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
சீராய்வு மனு காரணமாக கூடுதலாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர், தமிழகத்திற்கு கிடைக்கும். இதனால் மேலும் கோபமடைந்த கன்னட அமைப்புகள் மற்றும் சில விஷமிகள் நேற்று பெங்களூரில் பெரும் கலவரங்களை நடத்தினர்.
இன்று கலவர பாதிப்பு வெகுவாக குறைந்திருந்தாலும், சில இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்தன. மாநிலத்தின், சித்ரதுர்கா அருகே தமிழக பதிவெண் கொண்ட லாரி ஒன்று, தீக்கிரையாக்கப்பட்டது. பெங்களூரில் பீன்யா பகுதியில் தமிழக பதிவெண் லாரி தீக்கிரையாக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரிலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவிலுள்ள ஹாசன் மாவட்டத்தில், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த முத்தூட் பைனான்ஸ் நிறுவன விளம்பர பேனரில் இருந்த ரஜினிகாந்த் படத்தை கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் கிழித்து போராட்டம் நடத்தினர்.
முத்தூட் பைனான்ஸ் நிறுவன விளம்பர தூதர் ரஜினிகாந்த் என்பதால், முத்தூட் பைனான்ஸ் நிறுவன விளம்பர பேனரில் ரஜினிகாந்த் படம் இருந்தது. அந்த நிறுவனம் கேரளாவை சேர்ந்தவருக்கு சொந்தமானது. ஆனால் ரஜினி தமிழ் நடிகர் என்பதால் அவரது படத்தை மட்டும் பேனரில் இருந்து கிழித்து எறிந்தனர் கன்னட அமைப்பினர்.