காவிரி ஆணையம் கூடாது என ரஜினி சொல்ல வேண்டும்.. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கண்டிஷன்!
காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவித்தால் மட்டுமே காலா படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்துள்ளது.
Recommended Video
பெங்களூர்: காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவித்தால் மட்டுமே காலா படத்தை வெளியிட அனுமதிப்போம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்துள்ளது.
ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படம் உலகம் முழுக்க எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகிறது.
இந்த படம் வரும் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாநில திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை திரையிட முடியாது என்று கூறியுள்ளது. ஆனால் அம்மாநில அரசு படத்திற்கு எந்த விதமான தடையும் விதிக்கவில்லை.
காவிரி பிரச்சனையில் ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால், கன்னட அமைப்புகள் அவர் மீது கோபத்தில் உள்ளது. இதனால் காலா படத்தை திரையிட அவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் காலாவை வெளியிட ரஜினிக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. காவிரி குறித்து ரஜினி கூறிய கருத்துக்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும். காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும். விவசாயிகள் கூடி பேச்சு வார்த்தை நடத்த ரஜினி அழைக்க வேண்டும்.
ரஜினி இந்த எல்லா விஷயங்களுக்கும் நிபந்தனை இன்றி ஒப்புதல் அளிக்க வேண்டும். ரஜினி இந்த கோரிக்கையை ஏற்றால் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளது.