ரஜினிகாந்த் வேதனை: அரசியலுக்கு வர வலியுறுத்தாதீர்கள்
தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி நிகழ்வுகளை நடத்தி தன்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்து, புதிய கட்சி ஒன்றைத் துவங்கி அரசியலில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துவந்த ரஜனிகாந்த், சில நாட்களுக்கு முன்பாக அந்த முடிவிலிருந்து பின்வாங்கினார். தன்னுடைய உடல்நிலையின் காரணமாக தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலமாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இந்த நிலையில், அவரை அரசியலுக்கு வர வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை அவரது ரசிகர்கள் நடத்தினர். இதில் பெரும் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், தன்னை அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
"நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும் மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவைக் கூறிவிட்டேன்.
தயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று யாரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தன்னுடைய அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
பிற செய்திகள்:
- முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது
- "அனுபவம் மிக்க கேப்டன், புதுமண தம்பதி, சமீபத்தில் தந்தையான இளைஞர்" - குமுறும் மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்தினர்
- "பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல இழுத்து வந்தேன்": கோட்டாபய பேச்சு
- அட்லாண்டிக் பெருங்கடலில் 12 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: