20 ஆண்டாக அரசியல் பயிற்சி பெற்றிருக்கிறார் ரஜினி.. அவர்தான் ஊழலை ஓழிப்பார்.. சொல்கிறார் ராஜ்பகதூர்
இருபது ஆண்டாக அரசியல் பயிற்சியை ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார் என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளார். ரஜினியால்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பெங்களூரு: தொடர்ந்து 20 ஆண்டுகள் அரசியல் பயிற்சியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றிருக்கிறார் என்றும் அவரால்தான் தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் ரஜினிகாந்த்தின் நண்பர் ராஜ்பகதூர் கூறியுள்ளார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
5 நாட்களாக 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வந்த அவர், கடைசி நாளில் உரையில், அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது.
தனிக்கட்சி
இந்நிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது நீண்ட நாள் நண்பரான, பெங்களூருவில் வசிக்கும் ராஜ்பகதூர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்தார். அதே போன்று தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.‘
20 ஆண்டு பயிற்சி
ரஜினி காந்த் அரசியலில் பங்கேற்க தொடர்ந்து 20 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறார் என்றும் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் பயிற்சி எடுத்த அவரால் மட்டுமே தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினி சம்பளம்
திரைப்படத்தில் நடித்து பெறும் சம்பள விஷயத்தில் ரஜினிகாந்த் வெளிப்படையாக நடந்து கொள்கிறார் என்று ராஜ்பகதூர் சான்றிதழ் வழங்கி இருக்கிறார். அதனால், தமிழக மக்களின் அனைத்துப் பிரச்சனைக்கும் அவரால் வெளிப்பாடையாக தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் அவசியம்
ரசிகர் மன்றங்கள் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியாது என்று கருத்து தெரிவித்துள்ள ராஜ்பகதூர், ஊழல் பணத்தை கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுக்க ரஜினிக்கு அரசியல் தேவை என்ற கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டு மக்களால் வளர்ந்த ரஜினிகாந்த் தமிழகத்தில்தான் அரசியல் செய்ய முடியும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.