விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
டெல்லி: கடந்த 23 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிய ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனைக் கைதி நளினியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்து உத்தரவிட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் ஆறு பேரில் நளினியும் ஒருவர். தற்போது வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார்.
1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதானவர்களில் நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனையும், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் நளினியின் தூக்குத் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து அனைவரும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்ட நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. அவர்களது கருணை மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்க 11 ஆண்டு கால தாமதம் ஏற்பட்டதை குற்றவாளிகளுக்கு சாதகமாக்கி இந்த தண்டனைக் குறைப்பை உச்சநீதிமன்றம் அளித்தது.
இதையடுத்து அப்போதைய ஜெயலலிதா அரசு, நளினி உள்ளிட்ட ஆறு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இவர்களின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 23 ஆண்டு காலம் சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாலும், தனது நன்னடத்தை சிறப்பாக உள்ளதாலும் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஏற்கனவே நளினியின் இதே கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் நளினி விடுதலையாவது பெரும் சிக்கலாகியுள்ளது.