"ராஜிவ் கொலை" விசாரணையை விரைந்து முடிக்க நரசிம்மராவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் சோனியா"
டெல்லி: ராஜிவ் கொலை வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காக 1995-ம் ஆண்டு சோனியா காந்தி கடும் நெருக்கடி கொடுத்ததால் தாம் அவமதிக்கப்படுவதாக கருதுவதாக அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தெரிவித்ததாக முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர்சிங் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் கே.வி. தாமஸ் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சோனியாவை வெளிநாட்டுக்காரர் என்று கூறி முதுகில் குத்தியவர் சரத்பவார் என்று கூறியிருந்தார். அத்துடன் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக நரசிம்மராவுக்கும் சோனியாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருந்தது என்றும் கேவி தாமஸ் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து இணைய ஊடகம் ஒன்றில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:
எனது டைரியில் 13.5.1995..-ல். எழுதியிருப்பதாவது.. அப்போதைய பிரதமர் பிவி நரசிம்மராவ் என்னை அழைத்தார். நான் இரவு 8.40 மணியளவில் 7, ரேஸ்கோர்ஸ் சாலைக்கு சென்றார். பிவி நரசிம்மராவ் நடந்து கொண்டிருந்தார். அவர் உட்காரவில்லை.
அப்போது ராஜிவ் வழக்கு விசாரணை குறித்த சோனியா கடிதம் பற்றி பேசினார்.. தம்மால் சோனியாவை எதிர்கொள்ள முடியவில்லை.. ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் நான் என்னதான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.. என்னுடைய சுயமரியாதையையே கேள்விக்குள்ளாக்குகிறார்.. அவரது அணுகுமுறையால் என்னுடைய உடல்நலன் பாதிக்கப்படுகிறது.. அவரால் எத்தனை முறை நான் அவமானப்படுவது? என்றெல்லாம் கேட்டார்.
அதற்கு நான் சோனியாவிடம் நான் அரசியல் பற்றியெல்லாம் விவாதிப்பதில்லை.. அதே நேரத்தில் அவரது கணவரின் படுகொலை குறித்த விசாரணை விரைவாக நடத்தப்படவில்லை என உணர்கிறார் என்றார்.
அதற்கு பதிலளித்த நரசிம்மராவ், நட்வர், எல்லாவகையிலுமே விசாரணையை விரைந்து முடிக்கத்தான் முயற்சிக்கிறேன். சிதம்பரத்தை பொறுப்பாளராக போட்டிருக்கிறேன். எஸ்.பி. சவாணும் அவரை சந்தித்திருக்கிறார். ஏ.என். வர்மாவை நான் கொழும்புவுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.. இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்?
மேலும் "நான் இந்த பதவியில் இல்லாமல் இருந்தால்தான் சீக்கிரம் நடைபெறும் என்றால் நான் விலகவும் தயார்... அவரிடம் நீங்கள் ஏன் இதை சொல்லக் கூடாது..
எத்தனை முறைதான் அவருடைய முதிர்ச்சியற்ற அணுகுமுறையை எதிர்கொள்வதோ? என்றும் கூறினார்.
அத்துடன், இந்த விவகாரத்தில் அர்ஜூன்சிங் தலையீடுதான அதிகம்.. அவரை நான் பார்த்துக் கொள்கிறேன்.. அவர் சொல்வதையெல்லாம் ஏன் கேட்கவேண்டும் என்றும் ராவ் கூறினார்.
இதற்கு பதிலளித்த நான், மன்னிக்கவும்,... என்னிடம் நீங்கள் சொன்னதையெல்லாம் சோனியாவிடம் சொல்ல முடியாது.. நேரு குடும்பத்துக்கு மிக நெருக்கமான யூனுஸ் பாஸ்தான் சரியான நபர் என்றேன். சரி பின்னர் யூனுஸை நரசிம்மராவ் சந்தித்து பேசியது எனக்குத் தெரியும். ஆனால் அதை சொல்வதற்கான தருணம் இது அல்ல..