பிரணாப் முகர்ஜிக்குப் பதில் சந்திரேசகர் பிரதமராக ஆசைப்பட்ட ராஜீவ் காந்தி
டெல்லி: 1990ம் ஆண்டு வி.பி.சிங் ஆட்சி வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு பிரணாப் முகர்ஜியை, மறைந்த குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் பரிந்துரைத்தார். ஆனால் ராஜீவ் காந்தி அதை நிராகரித்து விட்டாராம். மாறாக சந்திரசேகருக்கு அவர் ஆதரவு கொடுக்கவே, சந்திரசேகர் பிரதமராகி விட்டார்.
"The Chinar Leaves" என்ற பெயரில் எம்.எல். பொதேதார் ஒரு நூல் எழுதியுள்ளார். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர். ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரும் கூட.
இந்த நூலில் 1990ல் நடந்த ஆட்சி மாற்றம், அதன் பின்னணியில் நடந்தது குறித்து விவரித்துள்ளார் பொதேதார்.
பிரணாபைப் பரிந்துரைத்த ஆர்.வி.
வி.பி. சிங் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து நான் ஆலோசித்தேன். அப்போது என்னிடம் அவர் பிரணாப்பை பிரதமராக்க ராஜீவ் காந்தி ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ஆர்.வி.
காங்கிரஸால்தான் முடியும்
குடியரசுத் தலைவரிடம் நான் பேசும்போது தற்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும். அனைத்துத் தரப்பையும் அனுசரித்துச் செல்ல முடியும் என்பதைத் தெரிவித்தேன்.
ராஜீவ் காந்தியை அழைக்கக் கோரிக்கை
மேலும் ஆட்சியமைக்க வருமாறு ராஜீவ் காந்திக்கு அழைப்பு விடுக்குமாறும் நான் ஆர்.வியிடம் கேட்டுக் கொண்டேன். அப்போது லோக்சபாவில் தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் திகழ்ந்தது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் ராஜீவ் காந்தி.
பிரணாப்பை பிரதமராக்கலாம்
அதற்கு என்னிடம் ஆர்.வி, பிரணாப் முகர்ஜியை பிரதமராக்குவதாக ராஜீவ் தெரிவித்தால் உடனடியாக நான் அழைப்பு விடுக்கிறேன். மாலையிலேயே பதவியேற்பையும் நடத்தி விடலாம் என்று தெரிவித்தார்.
மாற்றி யோசித்த ராஜீவ் காந்தி
ஆனால் ராஜீவ் காந்தியின் திட்டம் வேறு மாதிரி இருந்தது. அவர் சந்திரசேகருக்கு ஆதரவு கொடுத்தார். இதனால் பிரணாப் பிரதமராக முடியாத நிலை ஏற்பட்டது. சந்திரசேகர் பிரதமரானார் என்று எழுதியுள்ளார் பொதேதார்.