ராஜிவ் கொலை வழக்கு.. 7 பேரின் விடுதலைக்கு எதிரான மனு மீதான வாதங்கள் நிறைவு.. தீர்ப்பு ஒத்திவைப்பு
டெல்லி : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசு மனு மீதான அனைத்து வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஸ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் வாதம் கடந்த வியாழக்கிழமை நிறைவடைந்தது. இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதிகள் தரப்பு, மற்ற மாநில அரசுத் தரப்பு வாதங்கள் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் நேற்று (செவ்வாய்க்கிழமை) எடுத்துரைக்கப்பட்டது.
ஆயுள் கைதிகளில் ஒருவரான முருகன் நீங்கலாக மற்றவர்கள் சார்பில் வழக்கறிஞர் யுக் செளத்ரி ஆஜராகி வாதாடியபோது, 'ஆயுள் தண்டனை கைதிகள் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை மட்டுமே சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையமும் பரிந்துரைத்துள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க கால வரம்பை நிர்ணயிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற அனைத்து தரப்பு வாதங்களும் இன்றுடன் முடிவடைந்தன. 7 தமிழர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார்.
இன்றைய விசாரணையின் போது, 7 தமிழரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினால் குடியரசுத் தலைவரைத் தான் அணுகலாம்.. 23 ஆண்டுகாலம் சிறையில் இருந்ததாலேயே விடுதலை செய்துவிடலாம் என்ற தமிழக அரசின் முடிவு சரியல்ல என்று மத்திய அரசு வாதிட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பும் தங்களது வாதங்களை 1 வார காலத்துக்குள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.