தமது விடுதலையை மத்திய அரசு தீர்மானிக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் நளினி மனு!
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் தம்மை விடுதலை செய்வதில் மாநில அரசுதான் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் ஜனாதிபதியிடம் கருனை மனு தாக்கல் செய்திருந்தனர். அம் மனு மீது 11 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவு எடுக்கப்படாததால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று மூவரும் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு செய்தனர்.
அப்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் அந்த மனுவை விசாரித்து, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் தூக்கை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியதுடன் அவர்களை விடுவிப்பது பற்றி மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்பட ராஜி வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்க போவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இடைக்கால தடை பெற்றுள்ளது. ராஜிவ் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ நடத்தியதால் தண்டனை பெற்றோரை விடுவிக்க மத்திய அரசிடம்தான் ஒப்புதல் பெற வேண்டும் என்கிறது மத்திய அரசு.
இது தொடர்பாக வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ராஜிவ் கொலை வழக்கில் முடிவில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் நளினி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் நளினி கூறியுள்ளதாவது:
எனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை 2000-ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 24-ந் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நான் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன்.
எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு அதே போல் தண்டனை பெற்ற சுமார் 2200 பேர் அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய குற்றத்தண்டனை சட்டம் 432 மற்றும் 433 பிரிவுகளின் கீழ் விடுதலை பெற்று சென்று விட்டனர்.
நான் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருந்தாலும், அது பற்றி பரிசீலிக்கப்படவில்லை. சி.பி.ஐ. விசாரணை நடத்திய ஒரே காரணத்துக்காக எனக்கு விடுதலை மறுக்கப்படுகிறது.
சட்டப்பிரிவுகளின் முரண்பாடு
சட்டப்பிரிவு 435ன் கீழ் உள்ள ஷரத்துக்களை மேற்கோள் காட்டி என்னை விடுதலை செய்ய இயலாது என்று சொல்கிறார்கள்.
சட்டப்பிரிவு 435ன் படி சி.பி.ஐ. விசாரித்த ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்கும் முன்பு மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்கிறார்கள். ஆனால் ஒரு ஆயுள் தண்டனை கைதி, அந்த தண்டனை காலத்தை அனுபவித்த பிறகு அவரை விடுவிக்க வேறு எந்த தடையும் இல்லை என்று சட்டப்பிரிவுகள் 432 மற்றும் 433ல் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் முன்பு அவர்கள் இந்த சமுதாயத்தில் மற்ற வர்களுடன் சராசரியான, இயல்பான வாழ்க்கையை வாழ முடியுமா என்பது பற்றி மட்டுமே மாநில அரசுகள் ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்று அந்த சட்டப் பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஆயுள் தண்னை கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டிய தேவை இல்லை.
மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும்
சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில்தான் நிரந்தரமாக விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த நன்னடத்தையை ஆய்வு நடத்தி தீர்மானிப்பது மாநில அரசுகள்தான்.
ஆனால் சி.பி.ஐ. விசாரித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மட்டும் மத்திய அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்று சட்டப்பிரிவு 435 (1) கூறுகிறது. இந்த சட்டப்பிரிவு முரண்பாடாக நியாயம் இல்லாததாக உள்ளது.
ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்கும் போது மாநில அரசு, அவர் சராசரி வாழ்க்கை வாழ ஏற்ற வகையில் உள்ளாரா என்றுதான் பார்க்குமே தவிர யார் விசாரித்தார்கள் என்று பார்க்க மாட்டார்கள். எனவே எனக்கு இதில் நீதி வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் நளினி கூறியுள்ளார்.