அயோத்தியில் பாபர் மசூதியின் பூட்டுகளை அன்று திறந்துவிட்ட ராஜீவ்காந்தி
டெல்லி: நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த அயோத்தி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1985-ல் பாபர் மசூதியின் பூட்டுகளை திறந்தது முக்கியமான ஒரு சம்பவம்.
1984-ம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான இயக்கம் தொடங்கப்பட்டது. அதுவரை பல்வேறு நீதிமன்றங்களில் அயோத்தி வழக்குகள் நிலுவையில் இருந்தன.
1949-ல் பாபர் மசூதிக்குள் கடவுள் சிலைகள் வைக்கப்பட்ட போது பிரச்சனையை கட்டுப்படுத்த அந்த இடத்துக்கு பூட்டு போடப்பட்டது. இப்பூட்டை திறந்து மசூதிக்குள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதும் இந்து அமைப்புகளின் கோரிக்கையாக இருந்து வந்தது.
இதுதான் இந்தியா.. ராமர் கோயிலுக்கு தங்கத்தில் செங்கல் தருவேன்.. முகலாய வம்சாவளியின் யாகூப் அறிவிப்பு
ரத யாத்திரை
இந்த கோரிக்கையை முன்வைத்து 1984-ல் பீகாரில் இருந்து ஒரு ரதயாத்திரை டெல்லி நோக்கி சென்றது. இந்த யாத்திரை டெல்லியை சென்றடைந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
ஷாபானு வழக்கு விவரம்
இதையடுத்து இந்த ரதயாத்திரை முடிவுக்கு வந்தது. பின்னர் பொதுத்தேர்தலில் வென்று ராஜீவ் காந்தி பிரதமரானார். அப்போதுதான் பிரசித்திபெற்ற ஷாபானு வழக்கு நடைபெற்றது.
ஷாபானு- ஜீவனாம்சம்
ஷாபானு என்கிற இஸ்லாமிய பெண், 1970களில் தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்ட கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி மத்திய பிரதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் ஷா பானுவுக்கு ரூ179.25 பைசா ஜீவானாம்சம் வழங்க உத்தரவிட்டது.
ஷாபானு வழக்கு தீர்ப்பு
இதை எதிர்த்து ஷா பானு கணவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஷா பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. ஷா பானு வழக்கின் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அழுத்தத்தை ஏற்று முஸ்லிம் பெண்களுக்கான ஜீவனாம்சம் தொடர்பான ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி தாக்கல் செய்தார்.
பாபர் மசூதி பூட்டுகள்
ஆனால் இதனை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருந்தது. இதே காலகட்டத்தில், 1986-ம் ஆண்டு பாபர் மசூதியின் கதவுகளை திறக்க வேண்டும் என்பதற்காக இந்து அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன.
ராஜீவ் காந்தி தலையீடு
பாபர் மசூதியின் பூட்டை நாங்களே திறப்போம் என்கிற கோரிக்கை பலமாக ஒலித்தது. ஷா பானு விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவானர் என்கிற நிலை உருவாகிவிட்டதால் இப்போது ராஜீவ் காந்தி இந்துக்களுக்கு ஆதரவாக காட்டிக் கொள்ள அயோத்தி விவகாரத்தில் தலையிட நேர்ந்தது.
மசூதியின் பூட்டுகள் திறப்பு
பாபர் மசூதியின் பூட்டுகளை நீதிமன்ற அனுமதியுடன் திறக்க வகை செய்யும் சட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் மேற்கொள்ளப்பட்டன. அயோத்தியில் பாபர் மசூதியின் பூட்டுகள் நீதிமன்ற உத்தரவுடன் திறக்கப்பட்டன. இதற்கு பின்னர் மக்களை கோவில்- மசூதி சார்ந்து அணி திரட்டும் அரசியல் பணிகளும் அதிதீவிரமடைந்தன.