ராஜீவ் காந்தி நினைவு தினம்: டெல்லி நினைவிடத்தில் பிரணாப், சோனியா அஞ்சலி
ராஜீவ் காந்தியின் 26-ஆவது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவு தினமான வீர பூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லி: ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள வீர பூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீ பெரும்புதூரில் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ராஜீவ் நினைவுதினத்தையொட்டி டெல்லியில் உள்ள வீர பூமியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதே போல் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை இன்று அனுசரித்தனர். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ராஜீவ் காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை பயன்படுத்தி தமிழகத்தில் புறவாசல் வழியாக நுழைய பா.ஜ.க. முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். தேசிய கட்சிகளில் இணையாமல் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார்.