ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினம் அனுசரிப்பு... பிரணாப் முகர்ஜி, சோனியா, ராகுல் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
Recommended Video
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அப்போது அவர் குண்டு வைத்து கொல்லப்பட்டார். அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி இன்று டெல்லியில் உள்ள வீர் பூமியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராஜீவ் நினைவு புகைப்படக் கண்காட்சியை திருநாவுக்கரசர் திறந்து வைத்தார்.