ஈழத் தமிழர் பிரச்சனையை ராஜிவ் சரியாக கையாளவில்லை: முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்!
டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சனையை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சரியாக கையாளவில்லை என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் தமது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு "போதாத புத்தக சோதனை" காலம் இது.. மன்மோகன்சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசர் சஞ்சய் பாரு, நிலக்கரி துறை முன்னாள் செயலர் பரேக் ஆகியோர் தங்களது புத்தகங்கள் மூலம் பிரதமர் மன்மோகன்சிங்கை போட்டுத் தாக்கியிருந்தனர். இது எதிர்க்கட்சிகளுக்கு அவல் சாப்பிடுவது போலாகிவிட்டது.
இவற்றைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங்கின் வெளிவரப் போகும் புத்தகமும் மன்மோகன்சிங்குக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் குடைச்சலை கொடுக்க இருக்கிறது.
நட்வர்சிங் பின்னணி
கடந்த 2001ஆம் ஆண்டு ஈராக்கில் சதாம் உசேன் அதிபராக இருந்தபோது, ஐ.நா.பொருளாதார தடையால் கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துதேவைக்காக, உணவுக்கு எண்ணெய் திட்டத்தை ஐ.நா. சபை அமல்படுத்தியது. இதில் பெரும் ஊழல் நடந்ததாகவும், ஐ.நா.பொதுச் செயலாளராக இருந்த கோபி அன்னானின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்க வோல்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தாக்கல்செய்த விசாரணை அறிக்கையில், நட்வர்சிங், அவரது மகன் ஜகத்சிங் ஆகியோரின்பெயர்களும் இடம் பெற்றன. இருவரும் இத்திட்டத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் பலன் அடைந்ததாக வோல்கர்கமிஷன் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், இந்த முறைகேடுகளை செய்தபோதுநட்வர்சிங் அமைச்சராக இல்.
அந்தப் பதவியை பயன்படுத்தி சதாம் ஹூசேனின் ஆட்சியில் இருந்த அதிகாரிகளுடன் பேசி இந்தத் திட்டத்தின் காண்ட்ராக்ட்களை தனது மகன் தொடர்புடைய நிறுவனங்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார். லோகர் கமிஷன் அறிக்கை வெளியில் வந்தபோது நட்வர் சிங் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். இதனால் 2005 ஆம் ஆண்டு நட்வர்சிங் தமது வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.
நேரு, இந்திரா, ராஜிவ் மீது விமர்சனம்
பின்னர் காங்கிரஸ் கட்சியைவிட்டும் அவர் வெளியேறினார். தற்போது தமது சுயசரிதையை அவர் எழுதிக் கொண்டிருக்கிறார். அந்த புத்தகம் தேர்தல் முடிந்த பின்னர் வெளியிடப்பட இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர், சீனா விவகாரங்களை நேரு கையாண்ட முறை தவறு என்றும் நட்வர்சிங் விமர்சித்துள்ளார். அதேபோல் அவசரநிலையை பிரகடனம் செய்ததில் இந்திரா காந்தி தவறு செய்துவிட்டார் என்றும் தமது புத்தகத்தில் நட்வர்சிங் குறிப்பிடுகிறார்.
அதே நேரத்தில், பஞ்சாப் பொற்கோவில் மீதான ராணுவ நடவடிக்கையில் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்றுதான் இந்திரா உத்தரவிட்டிருந்தார்..ஆனால் ஆப்பரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கைக்குப் போன அதிகாரிகள் அதை பின்பற்றவில்லை என்றும் அதில் நட்வர்சிங் தெரிவித்துள்ளார்.
சீனா தொடர்பாக முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி தெளிவான கொள்கைகளைக் கடைபிடித்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் அவருக்குத் தொடர்பில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை அரசியல் ரீதியாக சரியாக ராஜீவ் காந்தி எதிர்கொள்ள தவறிவிட்டார். அதேபோல் இலங்கை தமிழர் பிரச்சனையையும் அவர் சரியாக கையாளவில்லை என்று நட்வர்சிங் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கை பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தவர் என்றும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு காரணகர்த்தா எனவும் புகழ்வது ரொம்ப அதிகப்படியானது என்று கூறியுள்ளார். அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தான போது தாம் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்ததையும் அப்போதைய அமெரிக்க அமைச்சர் காண்டலீசா ரைஸ் தாம் இல்லாவிட்டால் இந்த ஒப்பந்தமே நிறைவேறியிருக்காது என்று கூறியிருப்பதையும் நட்வர்சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.