7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு- ராஜிவுடன் பலியானோர் உறவினர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து ராஜிவுடன் பலியானோர் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனு கால தாமதமாக நிராகரிக்கப்பட்டதை காரணமாக தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து அவர்களையும் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. தற்போது ராஜிவ் வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் போது பலியானவர்களின் குடும்பத்தினர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் சார்பக வழக்கறிஞர் சிவபால முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளிகள் வழக்கு தொடர முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கருணை மனு நிராகரிப்பில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மனு மற்ற வழக்குகளுடன் சேர்த்து வருகிற 6 ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள்ப்படுகிறது.