இரண்டு மாணவிகளுடன் “எஸ்கேப்” ஆன பள்ளி முதல்வர் – இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கைது!
ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு பள்ளி மாணவிகளுடன் ஓட்டம் பிடித்த தனியார் பள்ளி முதல்வர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தவால் திரிவேதி என்ற அந்த 52 வயது முதல்வர் படாதரியில் உள்ள டாக்டர் தீப்சந்த் கார்டி இன்டர்நேஷனல் பள்ளியில் பணியாற்றி வந்தார்.
அதே பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
ஓட்டம் பிடித்த மாணவிகள்:
2012 ஆம் ஆண்டில் இவர்கள் இருவரும் 16 வயதை எட்டியபோது திரிவேதியுடன் ஓட்டம் பிடித்தனர். மாணவிகளை காணவில்லை என்று அவர்களது பெற்றோர் புகார் அளித்ததையடுத்து அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வருடங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்து மூவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
ஒரே ஆதாரம் செல்போன்:
எனினும் போலீஸ் விசாரணையில் மூவரும் எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. போலீசார் முன் இருந்த ஒரே ஆதாரம் தவாலின் செல்போன் மட்டுமே.
சுதாரித்த போலீசார்:
அவரது எண்ணை தொடர்ந்து கண்காணித்தபோது சில நாட்களுக்கு முன் ராஜ்கோட்டிலுள்ள உறவினரை அவர் தொடர்பு கொண்டதையடுத்து போலீசார் சுதாரித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசார் மொபைல் டவரை வைத்து அவர் பஞ்சாப்பில் தங்கியிருப்பதை தெரிந்துகொண்டனர்.
பஞ்சாப்பில் தஞ்சம்:
உடனடியாக பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மூவரின் புகைப்படமும் பஞ்சாப் போலீசாருக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கப்பட்டது. விரைந்து செயல்பட்ட பஞ்சாப் போலீசார் புத்லாடா பகுதியில் தங்கியிருந்த மூவரையும் கண்டுபிடித்தனர்.
மீட்கப்பட்ட மாணவிகள்:
பின்னர் தவால் திரிவேதியை கைது செய்த போலீசார் மாணவிகள் இருவரையும் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர். எதற்காக மூவரும் பஞ்சாப் சென்றார்கள் என்ற விவரம் இன்னும் கிடைக்கவில்லை.
உண்மையான விவரங்கள்:
விரைவில் தவாலை குஜராத் கொண்டு வந்து விசாரிக்க அம்மாநில போலீசார் முடிவு செய்துள்ளனர். அப்போது தான் உண்மையான விவரங்கள் தெரியவரும் என்று கூறப்படுகிறது.