தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ஆம் ஆத்மி ரூ. 10 லட்சம் நிதியுதவி
டெல்லி : டெல்லி பேரணியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட ராஜஸ்தான் விவசாயியின் குடும்பத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி பேரணி நடத்தியது. அப்போது ஜந்தர் மந்தரில் நடந்த பேரணியில் ராஜஸ்தான் விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் பெயர் கஜேந்திர சிங். விவசாயத்தால் திவால் ஆகிவிட்டதால் அவர் தற்கொலை செய்து கொள்வதாக அவரது கடைசிக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கஜேந்திர சிங்கின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் குமார் விஸ்வாஸ் கூறுகையில், ‘நேற்று தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜேந்திர சிங்கின் குடும்பத்திற்கு ஆம்ஆத்மி சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது' என்றார்.
விவசாயி தற்கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லோக்சபாவில் அளித்த தகவல் குறித்து கூறுகையில், ‘லோக்சபாவில் ராஜ்நாத் சிங் பொய் சொல்கிறார். அவர் கூறியது போல் டெல்லி போலீஸ் எந்த தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அங்கு நடத்த காட்சிகளின் பதிவு மீடியாக்களிடம் உள்ளது. போலீசார் அவர்கள் கடமையை செய்யவிடாமல் நாங்கள் தடுத்தோமா? முகேஷ் குமார் மீனாவே நேற்று கூறுகிறார், விவசாயியை மரத்தில் இருந்து இறக்குவது போலீசாரின் வேலை இல்லை என்று' எனத் தெரிவித்துள்ளார்.