ரபேல் ஒப்பந்தத்தில் ஊழலா.. பிரான்ஸ் முன்னாள் அதிபர் பேட்டிக்கு பிறகும் ராஜ்நாத்சிங் மறுப்பு
டெல்லி: ரபேல் போர் விமானம் தொடர்பான முக்கியமான ஒரு தகவலை பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே தெரிவித்ததிலிருந்து எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக தங்கள் வார்த்தை ஈட்டிகளை திருப்பி உள்ளன.
59 ஆயிரம் கோடி ரூபாய், மதிப்புள்ள விமான கொள்முதல் ஒப்பந்தம் இதுவாகும்.
ஆனால் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் விமான நிறுவனத்திற்கு விமான பராமரிப்பு பணிகளை கொடுக்காமல் ரிலையன்ஸ் குழுமத்திற்கு இந்த வாய்ப்பை மத்தியில் தற்போது ஆட்சி செய்யும் மோடி அரசு பெற்றுக்கொடுத்தது என்பது ஹாலண்டே பேட்டியின் மூலம் உறுதியாகி உள்ளது.
ஏனெனில் தங்களுக்கு வேறு எந்த ஒரு நிறுவனத்தையும் இந்திய அரசு பரிந்துரைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ரபேல் விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் இருப்பது ஊர்ஜிதமாகி விட்டது என்று காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசுக்கு இந்த விஷயத்தில் எந்த ஒரு பங்கும் கிடையாது. ஹாலண்டே அளித்த பேட்டி குறித்து விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசோ, பிரான்ஸ் அரசோ வணிகரீதியான முடிவுகளில் கருத்து கூறவில்லை என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் விளக்கம்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று அளித்துள்ள ஒரு பேட்டியில், ரபேல் விவகாரம் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் சர்ச்சைக்கு இடமே கிடையாது. குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.