உள்துறை பொறுப்பை ஏற்கும் முன்பே அதிகாரியுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை
டெல்லி: இன்னும் உள்துறை அமைச்சக பொறுப்புகளை ஏற்காத நிலையில் அந்த அமைச்சக செயலாளருடன் ராஜ்நாத்சிங் ஆலோசனைகளை நடத்தி நாடு எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.
கடந்த திங்கள்கிழமை நடந்த பிரதமர் பதவியேற்பு விழாவில் அமைச்சராக பதவியேற்றவர் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங். இவருக்கு, உள்துறை அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான அமைச்சர்கள் நேற்று தங்களது அலுவலகங்களுக்கு வந்து பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட நிலையில், ராஜ்நாத்சிங் இன்னும் அமைச்சர் பொறுப்பை ஏற்கவில்லை. அதேநேரம் காலத்தை விரையம் செய்யாமல், பாதுகாப்புத்துறை குறித்த ஆய்வு கூட்டங்களை நடத்த தொடங்கியுள்ளார்.
பாதுகாப்புத்துறை செயலாளர் அனில் கோஸ்சுவாமியை தனது இல்லத்துக்கு அழைத்த ராஜ்நாத்சிங், கடந்த காலங்களில் இந்தியா தவறவிட்ட வாய்ப்புகள், வருங்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், நாடு உடனடியாக சந்திக்கும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக வரும் ஜூன் 2ம்தேதி ஆந்திர மாநிலத்தின் பிரிப்பு நடைமுறைக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்தனர்.
இதனிடையே, இன்று மாலை அல்லது நாளை முறைப்படி தனது அமைச்சக பொறுப்புகளை ராஜ்நாத்சிங் ஏற்க உள்ளதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர்.