ஸ்ரீநகரில் சிகிச்சை பெறும் சிஆர்பிஎப் வீரர்கள்.. தலையை தடவி ஆறுதல் சொன்ன ராஜ்நாத்சிங்
ஸ்ரீநகர்: தீவிரவாதிகளின் தற்கொலை தாக்குதலுக்கு உள்ளான சிஆர்பிஎஃப் வீரர்களை ,மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தீவிரவாதிகளின் தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகியுள்ள நிலையில், சுமார் 100 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஸ்ரீநகரில் உள்ள '92வது மிலிட்டரி பேஸ்' மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள ராணுவ மருத்துவமனைகளில் அதி நவீன சிகிச்சை வசதி கொண்டது இந்த மருத்துவமனை என்று கூறப்படுகிறது.
லேசான மற்றும் மிதமான காயமடைந்தவர்களுக்கு இங்கேயே தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும், படுகாயமடைந்து உள்ள ராணுவ வீரர்கள், டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இன்று மாலை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களை, மருத்துவமனையில், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்களது தலை முடியை கையால் கோதி விட்டு, ராஜ்நாத்சிங் ஆறுதல் கூறியதோடு, சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதையும் நேரடியாக கேட்டறிந்து கொண்டார்.
Home Minister Rajnath Singh meets injured CRPF personnel at Army base camp in Srinagar #PulwamaAttack pic.twitter.com/aBxgf4qT1w
— ANI (@ANI) February 15, 2019
காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தாலும்கூட, ராணுவ வீரர்களிடம் எந்தவித பதட்டமும் தென்படவில்லை என்பது அவர்களது முகங்களை பார்த்தால் தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் விரைவிலேயே ராணுவ பணிக்கு திரும்பும் ஆர்வத்தில் இருப்பதை கவனிக்க முடிந்தது. ராஜ்நாத் சிங்குடன், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கும் காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களிடம் நலம் விசாரித்தார்.