7 பேர் விடுதலை- உச்சநீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு தமிழக அரசின் கடிதம் மீது முடிவு- ராஜ்நாத்சிங்
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதத்தின் மீது முடிவெடுக்கும் போது உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் கவனத்தில் கொள்வோம் என்று லோக்சபாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று லோக்சபாவில் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதம் கிடைத்துள்ளது. தமிழக அரசின் கடிதத்தில் உள்ள அம்சங்கள் குறித்து ஆராயப்படும்.
அப்படி ஆலோசிக்கும் போது உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அளித்துள்ள தீர்ப்பின் அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.