2ஜி தீர்ப்பு எதிரொலி.. ராஜ்ய சபாவில் காங்கிரஸ் அமளி!
2ஜி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து ராஜ்யசபாவில் காங்கிரஸ் அதுகுறித்து கேள்வி எழுப்பியது.
டெல்லி: 2ஜி தீர்ப்பு வெளிவந்ததை அடுத்து ராஜ்யசபாவில் காங்கிரஸ் அதுகுறித்து கேள்வி எழுப்பியது. காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடி இந்த விஷயத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் ராஜ்யசபாவில் அமளி நிலவியது.
2ஜி வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து இந்த விஷயம் குறித்து பாஜக விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை. மேலும் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி அசாத், மோடி இந்த விஷயம் பற்றி பேச வேண்டும். 2014ல் 2ஜியை வைத்து ஆட்சிக்கு வந்தது அவர்தான். அவர் இதில் பதில் அளிக்க வேண்டும். சபாநாயகரும் இதுகுறித்து பேச வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
இவ்வளவு வருடம் 2ஜி குறித்து செய்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் இப்போது என்ன பதில் வைத்து இருக்கிறீர்கள் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
சபாநாயகர் வெங்கையா நாயுடு இதற்கு பதில் அளிக்காததால் அங்கு அமளி நிலவியது. இதற்காக சபாநாயகர் இருக்கைக்கு முன் வந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பிரச்சனை நிலவியது.
சபாநாயகர் காங்கிரஸ் உறுப்பினர்களை அமைதியாம் இருக்கும் படி கூறினார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் சொல்வதை கேட்காமல் மேலும் கூச்சலிட்டனர். இதனால் ராஜ்யசபாவை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.