உ.பி. சிறுமிகள் கற்பழித்து கொலை: ராஜ்யசபாவில் அமளி- ஒத்திவைப்பு
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பிரச்னையை கிளப்பி பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் இன்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர், இதனால் ராஜ்யசபா பத்து நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் உசால்த் கிராமத்தில், கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மரத்தில் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, 5 பேரை கைது செய்தது. அதேநேரத்தில், கொலைக்கு வேறு காரணம் இருப்பதாக காவல்துறை கூறியதால், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பிரச்னையை ராஜ்யசபாவில் பகுஜன் சமாஜ்கட்சி உறுப்பினர்கள் 2வது நாளாக கிளப்பி இன்றும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் செல்வி மாயாவதி, உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்றார். எனவே அகிலேஷ் யாதவ் அரசை கலைக்க உத்தரவிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்திப் பேசினார்.
ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியின் இருக்கையின் அருகே வந்து பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பிக்கள் கூச்சலிட்டதால் அமளி ஏற்பட்டது இதையடுத்து அவை பத்து நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.