15வது நாளாக தொடர்ந்த எம்.பி.க்களின் அமளி.. ராஜ்யசபா திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு
டெல்லி: எதிர்க்கட்சிகள் அமளியால், ராஜ்யசபா இன்று நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, தெலுங்கு தேசம் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து தர்ணாக்கள் நடத்தி வருகிறார்கள். காவிரிக்காக அதிமுக எம்.பிக்கள் தர்ணா நடத்தி வருகிறார்கள். இதனால் இரு அவைகளின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
ராஜ்யசபாவில் தொடர்ந்து 15வது நாளாக இன்றும் தெலுங்கு தேசம் எம்.பிக்கள் தர்ணா நடத்தினர். ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு இருக்கையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
வெங்கையா நாயுடு சில அறிவிப்புகளை வெளியிடும்போதுகூட, தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் அமைதிகாக்கவில்லை. இதையடுத்து, ராஜ்யசபா திங்கள்கிழமை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்று வெங்கையா நாயுடு அறிவித்து அவையை ஒத்தி வைத்தார்.
ராஜ்யசபா எம்.பிக்களுக்கு வெங்கையா நாயுடு நேற்று அளிப்பதாக இருந்த விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்திருந்தார். அவையை தொடர்ந்து முடக்கி வந்ததால், விருந்து ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.