எதிர்க்கட்சிகள் அமளி.. இருஅவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு.. 18வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் இரண்டாவது அமர்வு கூடியது முதலே எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதன்காரணமாக அவை நாள்தோறும் ஒத்திவைக்கப்பட்டு அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று ராஜ்யசபா கூடியதும் அதிமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர்.
இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து ராஜ்யசபா இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளியால் லோக்சபாவும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் உறுப்பினர்களின் அமளியால் நாடாளுமன்றம் 18வது நாளாக முடங்கியுள்ளது.