அமித் ஷாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த முதல் அடி.. குஜராத்தில்!
குஜராத் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், வாய்மையே வெல்லும் என்று ட்விட்டியுள்ளார்.
அகமதாபாத்: குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பெரும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அகமது படேல், தனது வெற்றி சத்தியத்திற்கு கிடைத்த வெற்றி என்று ட்விட்டியுள்ளார்.
இதன் மூலம் குஜராத் மாநிலத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவின் ராஜதந்திரத்திற்கு முதல் அடி கிடைத்துள்ளது.
குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்தது பாஜக. இதனால் பெங்களூர் ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை அக்கட்சி தங்க வைத்து அடைகாத்தது.
கட்சி மாறி ஓட்டு
வாக்குபதிவுக்கு முதல்நாள்தான் எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், வாக்குப் பதிவு நடைபெற்ற போது 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நாங்கள் பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தனர். இதனால் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியானது.
காங்கிரஸ் மனு
எனவே, குஜராத் ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், பாஜகவுக்கு தான் வாக்களித்தோம் என இரு எம்.எல்.ஏக்கள் பகிரங்கமாக பேட்டியளித்தனர். அவர்களது வாக்குகள் செல்லாது என அறிவித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியது.
அவசர ஆலோசனை
இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருந்தது. எனவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வந்தனர். இதற்கு நடுவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லியில், இப்பிரச்சினை குறித்து அவசரமாக ஆலோசித்து வந்தனர்.
தேர்தல் ஆணையத்திடம் மனு
இதன்பிறகு, காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையத்திற்கு சென்று 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லாது என அறிவிக்க கோரியது. ஆனால் அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சந்தித்து 2 எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லும் என அறிவிக்க கோரினர்.
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இருமுறை இவ்வாறு அவர்கள் தேர்தல் அதிகாரியை சந்தித்தனர். இதனால் தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். நள்ளிரவு வரை ஆலோசனை தொடர்ந்தது. பாஜக தலைவர் அமித்ஷா, தேர்தல் ஆணையத்தின் வெளியே வந்து அமர்ந்து ரிசல்டுக்காக காத்திருந்தார். இரவு 11.30 மணியளவில் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவித்தது.
ஓட்டு செல்லாது
கட்சி மாறி வாக்களித்து, அதை வெளியே சொன்ன இரு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகளும் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ரகசிய வாக்கெடுப்பு முறைக்கு எதிராக அவர்கள் நடந்துகொண்டதை காரணமாக கூறி அந்த வாக்குகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அகமது படேல்
இதனையடுத்து அகமது படேலின் தலை தப்பியது. ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் அகமது படேல் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் 5வது முறையாக ராஜ்யசபாவிற்குச் செல்கிறார். அகமது பட்டேல் சரியாக 44 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
வாய்மையே வெல்லும்
தனது வெற்றி குறித்த அறிவிப்பு வெளியான உடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அகமது படேல், வாய்மையே வெல்லும் என்று பதிவிட்டார். இந்த வெற்றி சாதாரணமாக கிடைத்தது அல்ல. பணத்திற்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.
ராஜதந்திரம்
பாஜகவின் பலத்திற்கு எதிராக கிடைத்த வெற்றி இது. குஜராத்தில் பாஜக அரசின் பலத்தை எதிர்த்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம் என்று பதிவிட்டுள்ளார் அகமது படேல். பாஜகவின் ராஜதந்திரத்தை முறியடித்து வெற்றி பெற்றுள்ளார் அகமது படேல். பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோரும் வெற்றிபெற்றுள்ளனர். இருப்பினும் பல்வந்த் சிங் தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.