ராஜ்யசபா தேர்தல்: ப.சிதம்பரம், ராம்ஜெத்மலானி, அம்பிகாசோனி போட்டியின்றி தேர்வு
டெல்லி : ராஜ்யசபாவிற்கு காங்கிரஸ் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து போட்டியிட்ட ப.சிதம்பரம், பஞ்சாபில் இருந்து போட்டியிட்ட அம்பிகா சோனி, பிகார் மாநிலத்தில் இருந்து போட்டியிட்ட ராம்ஜெத்மலானி, மிசா பாரதி ஆகியோர் போட்டியின்று தேர்வாகியுள்ளனர்.
தமிழகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 57 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகாலம் விரைவில் காலியாக உள்ளது. இதையடுத்து அந்த பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 11ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான நேற்று, எதிர்ப்பு வேட்பாளர்கள் இல்லாத பெரும்பாலான மாநிலங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 6 பேர்
தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திங்கம், நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோரும், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகினர். இதனை சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான ஜமாலுதீன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ப.சிதம்பரம்
மகாராஷ்டிராவில் 6 இடங்களுக்கு 6 பேர் மட்டுமே போட்டியிட்டனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த பியூஷ் கோயல், வினய் சகஸ்ரபுத்தே, விகாஸ் மகாத்மே ஆகியோரும், சிவசேனா தரப்பில் சஞ்சய் ராவுத் எம்.பி.யும், காங்கிரஸ் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் பிரபுல் பட்டேலும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பிரபுல் பட்டேல்
வேட்புமனுவை திரும்பப் பெற நேற்று கடைசி நாள். வேறு யாரும் போட்டியிடாததால், ப.சிதம்பரம், பியூஷ்கோயல் பிரபுல் படேல் (தேசியவாத காங்கிரஸ்), பாஜகவின் வினய் சகஸ்ரபுத்தே, விகாஸ் மகாத்மே, சஞ்சய் ராவத் (சிவசேனா) ஆகியோரும் ராஜ்யசபா எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராம்ஜெத்மலானி - மிசா பாரதி
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் தலைவர் சரத் யாதவ், ஆர்.சி.சிங், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சியின் தலைவரான லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் பாஜக சார்பில் மூத்த தலைவர் கோபால் நாராயண் சிங் ஆகியோர் போட்டியின்றி ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அம்பிகா சோனி
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மூத்த காங்கிரஸ் தலைவர் அம்பிகா சோனி, ஆளும் ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் பல்விந்தர் சிங் பந்தர் ஆகியோரும் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.