தமிழக மீனவர் சுட்டுப் படுகொலை… வெளியுறவு அமைச்சருடன் திருச்சி சிவா அவசர சந்திப்பு
தமிழக மீனவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா இன்று வெளியுறவுத் துறை அமைச்சரை அவசரமாக சந்தித்துப் பேசினார்.
டெல்லி: தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று திமுக எம்பி திருச்சி சிவா இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் அக்பரை சந்தித்து வலியுறுத்தினார்.
கடந்த 6ம் தேதி இரவு, ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, கடலில் மீன் பிடிக்கச் சென்ற போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அக்பரை திமுகவைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா இன்று நேரில் சந்தித்தார். அப்போது, தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் சிவா வலியுறுத்தினார்.
மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா பேசும் போது, மீன்பிடிக்க செல்லும்போது தமிழக மீனவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.
மேலும், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவது வேதனை தருகிறது என்று கூறிய திருச்சி சிவா, இலங்கை கடற்படை மறுத்தாலும் அவர்கள்தான் தமிழக மீனவரை சுட்டிருக்க வேண்டும் என்று உறுதியாக கூறினார்.
மேலும், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் மீனவர் மீதான துப்பாக்கிச் சூடு குறித்து விளக்கம் தருவார் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் திருச்சி சிவா தெரிவித்தார்.