காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வாக முஷாரப் அளித்த பரிந்துரைகள் அபாரம்: ராம் ஜெத்மலானி
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் முன்னர் அளித்த பரிந்துரைகள் மிகவும் அபாரமானவை என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது:
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் முஷாரப் இந்தியாவுக்கு நேர்மையான நோக்கங்களுடன் வந்தார். காஷ்மீர் பிரச்சினைக்கு அவர் முன்வைத்த 4 பரிந்துரைகள் அபாரமானவை.
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக நான் நீண்ட காலம் பணியாற்றி வருகிறேன் என்பதை முஷாரப் நன்கு அறிவார். அவர் தனது பரிந்துரைகளை எங்கள் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் மூலம் என்னிடம் கொடுத்தார்.
காஷ்மீர் கமிட்டி சார்பாக நான் முஷாரப்பின் ஆவணத்தில் சில மாற்றங்களைச் செய்தேன் அதனை முஷாரப் ஏற்றுக் கொண்டார்.
அந்த பரிந்துரைகளின் பிரதான நோக்கம், இருதரப்பிலும் மதச்சார்பற்ற ஜனநாயகம் மலர்வதாகும்.
காஷ்மீர் கமிட்டி 2002ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரிவினைவாதிகளுடன் உரையாடலைத் தொடங்க அந்தக் கமிட்டி உருவாக்கப்பட்டது.
நான் பிரிவினைவாதிகளுடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபட்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் 'பாகிஸ்தான் ஏஜெண்ட்கள்' அல்ல. ஒரு சமயத்தில் அவர்கள் பாகிஸ்தானை ஆதரித்தனர். ஆனால் அதில் பெரும்பான்மையோர் இந்தியாவுடன் இருக்கவே விரும்புகின்றனர் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல்களை முன்னிட்டு பிரிவினைவாதிகளுக்கு சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளன, நான் அவர்களிடம் உங்கள் நடவடிக்கைகள் தடுக்கப்படுவதற்கான தெளிவான சாட்சியங்களுடன் வாருங்கள், நான் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்கிறேன் என்று தெரிவித்திருக்கிறேன்.
இவ்வாறு ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.