ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு... கேஜ்ரிவாலுக்காக வாதாட களமிறங்குகிறார் ராம்ஜெத்மலானி
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதாட இருக்கிறார்.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக 14 ஆண்டுகாலம் பதவி வகித்தவர் தற்போதைய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. அவரது பதவி காலத்தில் அந்த சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றன என்பது குற்றச்சாட்டு.
இது தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய அரசு விசாரணை நடத்தியது. இந்நிலையில் டெல்லி மாநில அரசும் இது குறித்து விசாரிக்க முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஒருநபர் விசாரணைக் கமிஷனை அமைத்துள்ளது. இதற்கு கோபால் சுப்பிரமணியமும் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தம் மீதான முறைகேடு புகார்களை நிராகரித்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, கேஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது ரூ10 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் புடைசூழ அருண் ஜேட்லி இந்த அவதூறு வழக்கைத் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலுக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராக உள்ளார். இதற்காக கேஜ்ரிவாலிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப் போவதில்லை எனவும் ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.