வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை பாஜக அரசு மீட்காது: ராம் ஜெத்மலானி
டெல்லி: வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில் பாஜக அரசு அதிக அக்கறைக் காட்டவில்லை என மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி குற்றம்சாட்டி உள்ளார்.
கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களுக்கு மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம் ஜெத்மலானி, ‘பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்காது. இந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் அரசு அதிக அக்கறைக் காட்டவில்லை' என்றார்.
இதனிடையே, இது குறித்து பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறுகையில், ‘கறுப்புப் பணம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாம் தாக்கல் செய்த மனு, மத்திய அரசுக்கு எதிரானதல்ல' என விளக்கமளித்துள்ளார்.