ஜெயலலிதாவுக்காக ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வருகை?
பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கேட்டு கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தால், 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கும்பட்சத்தில் அதற்கு ஹைகோர்ட் மட்டுமே ஜாமீன் அளிக்க முடியும், கீழ் கோர்ட்டுகள் அளிக்க முடியாது என்பது விதிமுறை. எனவே, கர்நாடக ஹைகோர்ட்டில் ஜெயலலிதா தரப்பில் ஜாமீன் கேட்டு இன்று மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
கர்நாடகாவில் தற்போது தசரா காரணமாக, கோர்ட்டுகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் கோர்ட் மட்டுமே ஹைகோர்ட்டில் இயங்கிவருகிறது. முக்கிய பெஞ்ச் செயல்படவில்லை.
இந்நிலையில், ஜெயலலிதா தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத் மலானி இன்று பெங்களூர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா தரப்பில், ஜாமீன் மனுவை அவரே தாக்கல் செய்ய உள்ளதாகவும், அடுத்தகட்டமாக நடைபெறும் விசாரணைகளின்போதும் ராம் ஜெத்மலானி ஆஜராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராம் ஜெத்மலானி பாஜகவில் இருந்தவர். சமீபத்தில் விலகினார். மேலும், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை ராம் ஜெத்மலானி விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.