பாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக சதி வலையில் சிக்காதீர்கள்- உச்சநீதிமன்றத்தை எச்சரித்த வழக்கறிஞர்கள்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக சதி வலையில் உச்சநீதிமன்றம் சிக்க கூடாது என மூத்த வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கை அவசர கதியில் நடத்தி முடிக்க துடிக்கும் பாஜகவின் சதி வலையில் சிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தை மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது முஸ்லிம் அமைப்புகள் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் கபில்சிபல், துஷ்யந்த் தவே, ராஜீவ் தவாண் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த விசாரணையில் பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர்கள், இவ்வழக்குக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என முயற்சித்துக் கொண்டிருக்கிறார். அவரது சதிவலையில் நீதிமன்றம் சிக்கிவிடக் கூடாது என ஒருசேர வலியுறுத்தினர்.
மேலும், 2014 லோக்சபா தேர்தலின் போது அயோத்தி விவகாரத்தைதான் பாஜக தமது தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக முன்னிறுத்தியது. அதற்கு உதவும் வகையில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது என்றார் கபில்சிபல்.
இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டிய தேவை இல்லை; இதை குறைந்தது 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வேண்டும். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பின்னர் இவ்வழக்கின் விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்றும் சுட்டிக்காட்டினார் கபில் சிபல்.
இருப்பினும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு இவ்வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது,