ராமர்கோயில் கட்ட 4 மாதங்கள் தான் உங்களுக்கு டைம்... மத்திய அரசுக்கு ஆர்எஸ்எஸ் கெடு
அலகாபாத்:ராமர் கோயில் கட்ட 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால் அந்த பணிகளை தொடங்குவோம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கும்ப மேளா நடைபெற்றுவரும் பிரயாக்ராஜ் நகரில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் துறவியர் மாநாடு நடைபெற்றது. அதில், பேசிய சில துறவிகள், ராமர் கோயில் கட்டுவதை உச்சநீதிமன்றம் தாமதப்படுத்துவதாக குற்றம்சாட்டினர். சிலர், மத்திய பாஜக அரசு மீது குற்றம்சாட்டினர்.
எனினும், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தருகே உள்ள நிலத்தை ஒப்படைக்க அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தவிர, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் வரை ஹிந்துக்கள் ஓயமாட்டார்கள், மற்றவர்களையும் அமைதியாக இருக்க விடமாட்டார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ராமர் கோயில் விவகாரம், தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது; இந்த நேரத்தில் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நமது லட்சியத்தில் இருந்து கவனம் திசை திரும்பக் கூடாது. தேவைப்பட்டால், நமது கோபத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
ராமர்கோயில் கட்டப்படும். தயவு செய்து 6 மாதம் வரை பொறுக்க வேண்டும். மத்தியில் மோடியின் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஏனெனில், அவரது கட்சி மட்டுமே ராமர் கோயில் கட்டுவதைப் பற்றி பேசுகிறது என்றார்.
கூட்டத்தின் முன் கூடிய விஎச்பிக்கு எதிரான சாதுக்கள் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு எதிராக கோஷமிட்டனர். அதனால், அங்கு சில மணி நேரம் சாதுக்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவியது. இவர்களை விஎச்பி ஆதரவு சாதுவான அகிலேஷ்வராணந்த் தலையிட்டு சமாதானப் படுத்தினார்.