பீகார், ஹிமாச்சல் மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
டெல்லி: பீகார் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களாக ராம்நாத் கோவிந்த், ஆச்சார்ய தேவ் விராத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆளுநர்களில் பலர் மாற்றப்பட்டனர். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம், உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண்சிங் மற்றும் பாரதிய ஜனதா தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
பீகார், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களின் ஆளுநர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். மேற்கு வங்காள ஆளுநர் கே.என். திரிபாதியே பீகார் மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங், ஹிமாச்சல பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், பீகார் மாநில ஆளுநராக மூத்த பா.ஜ.க. தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் ஹிமாச்சல பிரதேச ஆளுநராக ஆச்சார்ய தேவ் விராத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று பிறப்பித்துள்ளார்.