'இன்டர்வியூ' கொடுத்த சில மணி நேரங்களில் குர்மீத் ராம் ரஹீம் வளர்ப்பு மகள் ஹனிப்பிரீத் அதிரடி கைது!
சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இன்சானை பஞ்சாப் போலீஸார் கைது செய்து அவரை ஹரியாணா போலீஸிடம் ஒப்படைத்தனர்.
சண்டிகர்: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட குர்மீத் ராம் ரஹீமின் தத்து மகள் ஹனிபிரீத் இன்சானை இன்று பஞ்சாப் போலீஸார் கைது செய்து ஹரியாணா போலீஸில் ஒப்படைத்தனர்.
தேரா சச்சா சவுதா என்ற இயக்கத்தின் தலைவராக உள்ளவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் ஆவார். இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் சிர்சா நகரில் ஆசிரமத்தை தொடங்கினார். இங்கு கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண் சீடர்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவுடன் பஞ்சாப் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் 38 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர்.
லுக் அவுட் நோட்டீஸ்
இந்த வன்முறையை தூண்டிவிட்டதே ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் என்று தகவலறிந்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்த ஆயத்தமாகினர். இதனை அறிந்த ஹனிபிரீத் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் அவர் எங்கும் தப்பி செல்லக் கூடாது என்பதற்காக அவருக்கு எதிராக போலீஸார் லுக் அவுட் நோட்டீஸை விடுத்தனர்.
ஜாமீன் மனு
இதனிடையே ஹனிபிரீத் இன்று ஆங்கில செய்தி சேனலுக்கு தலைமறைவாக இருந்தபடியே பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் வன்முறையை நான் தூண்டிவிட்டதாக ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா. நான் பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றங்களில் ஜாமீன் கோரியுள்ளேன் என்றார்.
கைதை உறுதிசெய்த பஞ்ச்குலா ஆணையர்
இவ்வாறு பேட்டி கொடுத்த சில மணிநேரங்களில் ஹனிபிரீத் கைது செய்யப்பட்டார். இதை பஞ்ச்குலா காவல் துறை ஆணையர் ஹர்ஷிந்தர் சிங் சாவ்லா உறுதி செய்தார். ஹனிபிரீத் ஸிராக்பூர்- பாட்டியாலா சாலையில் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் காவலில் வைத்துள்ளோம். வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம். இத்தனை நாள்கள் ஹனிபிரீத்துக்கு அடைக்கலம் கொடுத்திருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ஹனிபிரீத் மீது கணவர் புகார்
ஹனிபிரீத்துக்கும் ராம் ரஹீமுக்கும் தவறான உறவு உள்ளதாக அவரது முன்னாள் கணவர் விஸ்வாஸ் குப்தா பரபரப்பு புகார் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை தமது பேட்டியின் மூலம் ஹனிபிரீத் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஹரியாணாவில் கடந்த ஆகஸ்ட் 25-இல் நடைபெற்ற கலவரத்தில் 43 பேரை போலீஸார் தேடி வரும் பட்டியலில் ஹனிபிரீத்தின் பெயர் முதலிடத்தில் உள்ளது.