அபராதம் கட்ட முடியாது... ராம் ரஹீம் சொன்ன வித்தியாசமான காரணம்... அதிர்ந்து போன நீதிமன்றம் !
நான் இந்த உலகத்தையே துறந்துவிட்டதால் அபராதம் எல்லாமே கட்ட முடியாது என ராம் ரஹீம் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்: தேரா சச்சா நிறுவனத்தின் தலைவரான ராம் ரஹீம் பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை செலுத்து அவர் மறுத்துள்ளார்.
இதற்கு அவர் "நான் இந்த உலகத்தையே துறந்துவிட்டேன், அதனால் அபராதத் தொகையெல்லாம் செலுத்த முடியாது" என காரணம் தெரிவித்துள்ளார்.
இவர் கூறியுள்ள இந்தக் காரணத்தைக் கேட்டு சிறப்பு நீதிமன்றம் அதிர்ந்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட ராம் ரஹீம்
இந்தியாவின் வலிமையான நபர்களில் ஒருவர் என சில நாட்களுக்கு முன்பு புகழப்பட்டு வந்தவர் ராம் ரஹீம் சிங் . தேரா சச்சா அமைப்பின் தலைவரான இவர் மீது 2002 ஆண்டு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் இவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தீர்ப்பால் கலவரம்
இவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததை அடுத்து தேரா சச்சா அமைப்பின் தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நடைபெற்ற இந்த கலவரத்தால் மூன்று மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கலவரத்தால் மொத்தம் 41 பேர் மரணமடைந்தனர்.
வாழ்க்கையைத் துறந்தவர்
இந்த நிலையில் ராம் ரஹீமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் 20 வருட சிறையுடன் 30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த அபராதத்தை விதிப்பதில் இருந்து விலக்கு கேட்டிருக்கிறது ராம் ரஹீம் தரப்பு. இதற்கு " ராம் ரஹீம் மொத்த உலகத்தையும் துறந்துவிட்டார். அவரிடம் இப்போது எந்தப் பணமும் இல்லை. அவரால் 30 லட்சம் ரூபாய் பணம் எல்லாம் கட்ட முடியாது" என்று வாதிட்டுள்ளது. ராம் ரஹீம் தரப்பின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு மேல் முறையீடு
இந்த நிலையில் 20 வருட சிறை தண்டனையை எதிர்த்து ராம் ரஹீம் தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அதேபோல் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்க கோரி எதிர் தரப்பும் மேல் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது .