"நான் ஆண்மையற்றவர்"-ராம் ரஹீம் வாதம்... "ஆனா உங்களுக்கு மகள்கள் உள்ளனரே"- நீதிபதியின் பதிலடி
பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராம் ரஹீம் தான் ஆண்மையற்றவர் என்று கூறியதற்கு உங்களுக்கு மகள்கள் உள்ளனரே என்று நீதிபதி ஜெகதீப் சிங் பதிலடி கொடுத்தார்.
சன்டிகர்: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் ரஹீம், தான் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் உடலுறவு கொள்ள இயலாத நிலையில் இருந்து வருகிறேன் என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதியோ தங்களுக்கு இரு மகள்கள் உள்ளனரே என்று பதிலடியாக கேட்டனர்.
கடந்த 2002-ஆம் ஆண்டு ஆசிரமத்தில் தங்கியிருந்த இரு பெண்களை ராம் ரஹீம் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 28-ஆம் தேதி ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள சுனாரியா நீதிமன்றத்தில் வழக்கின் தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டது. அப்போது ராம் ரஹீம் சிங் கூறுகையில் 1990-ஆம் ஆண்டு முதல் என்னால் உடலுறவில் ஈடுபடமுடியாத அளவுக்கு எனக்கு ஆண்மை போய்விட்டது.
எனவே என்னால் யாருடனும் உறவு கொள்ள முடியாது. இந்த பாலியல் புகார் பொய்யானது என்று ராம் ரஹீம் வாதத்தை முன்வைத்தார். அப்போது நீதிபதி பதிலளிக்கையில், உங்களது வாதம் எந்த விதத்திலும் தகுந்தபடி இல்லை.
ஏனெனில் உங்களுக்கு இரு மகள்கள் உள்ளதாகவும் அவர்கள் தேரா சச்சா விடுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு தங்கியிருந்தனர் என்று உங்கள் தரப்பு சாட்சியான விடுதி காப்பாளர் தெரிவித்திருந்ததில் இன்று நீங்கள் கூறுவது பொய் என்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றார் நீதிபதி. இதனால் ராம் ரஹீம் செய்வதறியாது திகைத்தார்.