ராம் ரஹீமின் 'தேவதை' ஹனி திடீர் மாயம்.. வலைவீசி தேடுகிறது ஹரியானா போலீஸ்
டெல்லி: போலிச்சாமியார் ராம் ரஹீம் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் திடீரென மாயமாகிவிட்டார். அவரை தேடப்படும் நபராக ஹரியானா காவல்துறை அறிவித்துள்ளது.
வளர்ப்பு மகள் என்ற போர்வையில் அவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக ஹனிப்ரீத் கணவர் ராம்ரஹீம் மீது குற்றம்சாட்டியிருந்தார். இருப்பினும் ஹனிப்ரீத் தனது டிவிட்டர் கணக்கின் பயோவில், தான் தந்தையின் தேவதை என குறிப்பிட்டிருந்தார்.
பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் பாலியல் வழக்கில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, ராம்ரஹீம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. அப்போது கோர்ட் ஹாலில் ஹனிப்ரீத் காணப்பட்டார்.
சர்ச்சை
ராம்ரஹீம் மீதான தீர்ப்பையடுத்து அவரின் தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அவர் ஹெலிகாப்டர் மூலம் ரோத்தக் சிறைக்கு அனுப்பப்பட்டார். அப்போது ஹெலிகாப்டரில் ஹனிப்ரீத் அமர்ந்திருந்ததாக சர்ச்சை வெடித்தது. அதுகுறித்த போட்டோக்கள் வைரலாகியுள்ளன.
தேடப்படுகிறார்
இந்த நிலையில், ஹனிப்ரீத் அதன்பிறகு எங்கே போனார் என தெரியவில்லை. ஹனிப்ரீத் தேடப்படும் நபர் என்று ஹரியானா மாநில போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். விமான நிலையங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அடுத்த வாரிசு
தேரா சச்சா அமைப்பின் அடுத்த வாரிசு என ஹனிப்ரீத் பெயர் அடிபட்ட நிலையில், அவர் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேரா சச்சா ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராம் ரஹீம் மீதான தீர்ப்பையடுத்து கலவரத்தை தூண்டியதில் இவருக்கு பங்குள்ளதாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேடப்படும் நபர்
இதேபோல தேரா சச்சா செய்தித்தொடர்பாளர் ஆதித்யா இன்சான் என்பவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். கலவரத்திற்கு இவரும் காரணம் என இன்சான் தேசத் துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.