ராமர் பாலம்: திமுக மீது பழி போடும் காங்கிரஸ்.. குஷியில் மத்திய அமைச்சர்கள்
Recommended Video
டெல்லி: ராமர் பாலம் இல்லை என காங்கிரஸ் கூறியதற்கு காரணம், திமுகதான் என்று முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் கூறியுள்ளார்.
இந்தியா-இலங்கை நடுவே ராமேஸ்வரம் கடல் பகுதியில், புராண காலத்தில் ராமரின் வானர படைகளால் பாலம் கட்டப்பட்டது என்று ராமாயண இதிகாசத்தில் தகவல் இடம் பெற்றுள்ளது.
இருப்பினும், இதற்கான வரலாற்று ஆதாரம் குறித்த சர்ச்சைகளும் நடந்து வந்தன. ஆனால் அமெரிக்க டிவி சேனல் ஒன்று ராமர் பாலம் என்று அழைக்கப்படும் பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கற்பாலம் இருப்பது உண்மை என கூறியுள்ளது.
|
அமெரிக்க டிவி சேனல்
அமெரிக்க அறிவியல் நிபுணர்களின் ஆராய்ச்சி விவரத்தை அந்த நாட்டின் பிரபல சயின்ஸ் சேனல் முன்னோட்ட வீடியோவாக வெளியிட்டது. அதில், இந்தியா-இலங்கை நடுவேயான இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் சுமார் 7000 ஆண்டுகள் பழமையானவை. இந்த பாலம் 30 மைல்கள் நீளமானவை. அங்கு மணல் திட்டுங்கள் உருவாகியுள்ளது உண்மைதான். ஆனால் அவை கற்களால் பாலம் அமைக்கப்பட்ட பிறகே உருவாகியுள்ளன. மணல் திட்டுக்களின் வயது சுமார் 4000 ஆண்டுகள்தான் என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசு மறுப்பு
ஆனால், சுப்ரீம் கோர்ட்டில், ராம் சேது குறித்த வழக்கில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இந்தியா-இலங்கை நடுவே பாலம் எதுவும் இல்லை. மணல் திட்டுதான் உள்ளது என்று கூறியிருந்தது. அதை சுட்டிக்காட்டி பாஜக அமைச்சர்கள் காங்கிரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அமைச்சர் பியூஷ் கோயல்
பாஜக மூத்த தலைவரும், ரயில்வே அமைச்சருமான, பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில், காங்கிரசின் ராமர் சேது குறித்த நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ராமரை கடவுள் என பாஜகவினர் நம்புகிறோம். ராமர் பாலம் மதிக்கப்பட வேண்டும். அதில் பல கோடி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதை சேதப்படுத்தி விடக்கூடாது என்றார்.
பாரம்பரிய சின்னம்
மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ராமர் பாலம் இயற்கையாக தோன்றிய அமைப்பு அல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்டது. இது காலகாலமாக நம்பிவரும் எங்கள் நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. ராமர் பாலம், இந்த நாட்டின் பாரம்பரிய சின்னம். அதை சேதப்படுத்தக்கூடாது. என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் மவுனம்
மத்திய அமைச்சர்கள் அமெரிக்க ஆய்வு வீடியோவை மையமாக வைத்து காங்கிரசை விமர்சனம் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் அதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்ததால்தான் ராமர் பாலம் விவகாரத்தில் காங்கிரஸ் அத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததாக கட்சிக்குள் உள்ள சீனியர்கள் சிலர் தெரிவிப்பதாக டைம்ஸ் நவ் ஆங்கில சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
திமுகதான் காரணம்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில், நாட்டின் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றிய, மோகன் பராசரன் அந்த டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், "ராமர் பாலம் விவகாரத்தில் திமுகவுக்கு நம்பிக்கையில்லை. அப்போது திமுகவை சேர்ந்தவர் கப்பல்துறை அமைச்சராக இருந்தால். அவரது பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு நீதிமன்றத்தில், ராமர் பாலத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது" என கூறியுள்ளார்.
திமுக விளக்கம்
இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், இந்திய தொல்லியல் துறைதான், முதலில் அப்படி ஒரு அறிக்கையை அளித்தது. திமுக சார்பில் கட்டுமானம் பற்றி ஆய்வுகள் எதுவும் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.