சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படாது: மோடி அரசு திட்டவட்டம்
டெல்லி: ராமர் பாலத்தை உடைத்து சேது சமுத்திர திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளுக்கான அமைச்சர் நிதின் கட்காரி லோக்சபாவில் இன்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின்போது சேதுசமுத்திர திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்து நிதின் கட்காரி கூறியதாவது: இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது. ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று பாதையில் சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த அரசு யோசித்து வருகிறது. இதற்கான சில மாற்று பாதைகளும் அரசால் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்று பாதை வாய்ப்புகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்கும். ராமர் பாலத்தை இடிக்க கூடாது என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிலையாகும்.
மேலும், தரைவழி, கப்பல் வழி, ரயில்பாதை பயணம் போல நாட்டிலுள்ள நதிகளின் வழியாக பயணிகள் போக்குவரத்தை நடத்த 'ஜல்மார்க் யோஜ்னா' என்ற திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் அரசிடமுள்ளது. இதன்மூலமாக நெடுஞ்சாலைகளில் வாகன பெருக்கத்தை குறைக்க முடியும். நீர் வழி பாதை பயணத்துக்கு கிலோ மீட்டருக்கு 50 பைசா மட்டுமே செலவாகும். அதே நேரம் ரயிலில் ஒரு கிலோமீட்டருக்கு 1 ரூபாயும், சாலை வழியில் ரூ.1.50ம் செலவாகிறது.
இவ்வாறு நிதின் கட்காரி தெரிவித்தார்.