ராமர் பாலம் பகுதி 'கலாசார பாரம்பரியத்தின்' ஒரு பகுதி: பாஜக தேர்தல் அறிக்கை
டெல்லி: மன்னார் வளைகுடாவில் இருக்கும் ராமர் பாலம் பகுதி நாட்டின் கலாசார பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்குவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் சேது கால்வாய் திட்டம் பற்றியும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்ககப்பட்டுள்ளது. 'ராம் சேது' என்ற தலைப்பில், ராம் சேது பகுதி நமது கலாசார பாரம்பரியத்தின் ஒரு பகுதி. அத்துடன் தோரிய படிமம் ஏராளமாக உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். சேது சமுத்திர கால்வாய் திட்டம் குறித்து எந்த ஒரு முடிவெடுக்கும் போதும் இந்த அம்சங்கள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பிற அம்சங்கள்:
நகர்ப்புற சுத்தம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை தருவோம். விசாரணை, உளவு அமைப்புகளை அரசியல் தலையீடுகளில் இருந்து காப்போம்.
நாடு முழுவதும் 100 புதிய நகரங்களை களை உருவாக்குவோம். மதசார்பற்ற, அமைதியான சூழலில் அனைத்து மதத்தினரும் பயமின்றி வாழ வகை செய்வோம்
நாட்டில் தீண்டாமையை ஒழிக்க பாடுபடுவோம். யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்துவோம்.
கருப்புப் பணத்தை ஒழிப்போம், வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர தனி அமைப்பை உருவாக்குவோம்
வருமான வரி செலுத்தும் வேலையை சுலமாக்குவோம். வேலைவாய்ப்பு அலுவலகங்களை சீரமைத்து பயிற்சியுடன் கூடிய அம்சங்களை அமல்படுத்துவோம்
தேசிய அளவில் விவசாய சந்தை அமைப்போம். உணவுப் பொருட்களை விலையை நிலையாக வைத்திருக்க தனி நிதியம் உருவாக்குவோம்.
உணவுப் பதுக்கலை தடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்போம். திறமை, சுற்றுலா, வர்த்தகம், பாரம்பரியம், தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் தருவோம்.
இவ்வாறு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.