அயோத்தியில் உருவாகும் 'ராம்நாடு'... உத்தரபிரதேசத்திற்கு புதிய ப்ளூ பிரிண்ட் போடும் யோகி!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மட்டுமில்லாமல் ராமர் சம்பந்தமாக நிறைய புதிய திட்டங்களை கொண்டுவர அம்மாநில முதல்வர் முடிவு செய்துள்ளார்.
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மட்டுமில்லாமல் ராமர் சம்பந்தமாக நிறைய புதிய திட்டங்களை கொண்டுவர அம்மாநில முதல்வர் முடிவு செய்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் பதவி ஏற்றவுடன் உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று உறுதியளித்திருந்தார். மேலும் அடுத்த தீபாவளி கொண்டாட்டங்கள் கண்டிப்பாக ராமர் கோவிலில் கொண்டாடப்படும் என்று கூறியிருந்தார்.
தற்போது அங்கு ராமர் சிலையும் கட்டப்படும் என சில நாட்களுக்கு முன் கூறினார். தற்போது சிலை, கோவில் மட்டும் இல்லாமல் நிறைய புதிய ராமர் தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
ராமருக்கு கோவிலும் சிலையும்
உத்தரபிரதேசத்தில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுள்ள ராமர் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு எல்லாம் முன்னோடி இந்த இரண்டு திட்டங்கள் தான். முதலில் ராமர் கோவில் காட்டப்படும் என்று கூறப்பட்டது. யோகி ஆதித்யாநாத் பதவி ஏற்றவுடன் முதலில் கூறியது இந்த திட்டம்தான். அடுத்தபடியாக அவர் அறிவித்ததுதான் ராமருக்கு சிலை என்ற திட்டம். இதற்காக அயோத்தியின் மத்திய பகுதியும், சராயு நதியின் கரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டில் எந்தப் பகுதியில் சிலை அமைக்க பசுமை ஆணையம் அனுமதி வழங்குகிறதோ அங்கு கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிலை 100 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட இருக்கின்றது.
ராமருக்கு அருங்காட்சியகம்
இந்த திட்டத்தில் அடுத்தபடியான அதிக பொருட் செலவில் கட்டப்பட இருப்பதுதான் ராம் அருங்காட்சியகம். இந்த ராம் அருங்காட்சியகமும் அயோத்தியிலேயே கட்டப்பட இருக்கின்றது. இதில் ராமர் காலத்தில் நடந்த விஷயங்கள், ராமாயணம் குறித்த தகவல்கள், அனுமார் குறித்த தகவல்கள், சீதை குறித்த அறியப்படாத விஷயங்கள் என பலவும் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இது ராமர் குறித்து ஆராய்பவர்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக 155 கோடி செலவிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமாயணம் குறித்த கேலரி
இது ராம் அருங்காட்சியகம் போல் அல்லாமல் முழுக்க முழுக்க ராமாயணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கட்டப்பட இருக்கின்றது. இதில் ராமாயணம் குறித்து கதை விளக்கங்களும், விழாக்களும், கதை சொல்லாடலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவும் பட்ஜெட்டில் தனி தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய அரங்கு மாதிரி இது அமைக்கப்படும்.
ராம் லீலா திட்டம்
இந்த புதிய திட்டத்த்தின்படி ராம் லீலா மாநகரை மீண்டும் மறு நிர்மாணம் செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 100 கோடி வரை செலவு செய்ய திட்டம் இட்டுள்ளது. அதன்படி ராம் லீலா நகரை மொத்தமாக மாற்றி புதிதாக , அதன் வரலாற்றை பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட இருக்கின்றது. இந்த நகரம் முழுக்க சிறிய அளவில் நிறைய ராம் கோவில்கள் கட்டப்பட இருக்கின்றது.
ராமரின் முகம் சிலையாக்கப்படும்
இதையடுத்து இன்னொரு சிலை திட்டத்தையும் யோகி தலைமையிலான அரசு செயல்படுத்த இருக்கின்றது. அதன்படி ராமரின் முகத்தை சிலையாக வடிவமைத்து, வித்தியாசமான முறையில் செப்பனிட்டு அதை அயோத்தியில் நிர்மாணிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் அதிக அளவு பணம் ஒதுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
ராமருக்கு மற்ற திட்டங்கள்
இது மட்டும் இல்லாமல் அயோத்தியில் இன்னும் சில திட்டங்கள் ராமருக்காக நடை முறைப்படுத்தப்பட இருக்கின்றது. அதன்படி ராமர் - சீதை திருமண அரங்கம், ராமாயணத்தில் வரும் பெரிய நபர்களுக்கு சிலை, அயோத்தி புதிய நிர்மாணம், கோவில்களுக்கு சாலைகள், கோவில்களுக்கு மின்வசதிகள் என நிறைய அறிவிக்கப்பட இருக்கின்றது. இதற்காக மட்டும் பட்ஜெட்டில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஒதுக்கப்பட இருக்கின்றது.