அயோத்தியில் கண்டறியப்பட்ட தளர்வான மணல், கட்டுமானத்தில் சிக்கல்? கட்டுமான நிறுவனங்கள் புதிய முயற்சி
அயோத்தி: நீண்ட ஆண்டுகளாக நிலுவையிலிருந்த அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் கடந்தாண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயிலுக்குக் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது கங்கை, யமுனை, புராணங்களில் நம்பப்படும் சரஸ்வதி நதியிலிருந்து மண்ணும், தண்ணீரும் கொண்டு வந்து பூமி பூஜையில் பயன்படுத்தப்பட்டது.
161 அடி உயர ராமர் கோயில்
சுமார் 161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த ராமர் கோயில், மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இந்த ராமர் கோயிலை மூன்று முதல் மூன்றரை ஆண்டுக்குள் கட்டி முடிக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
தளர்வான மணல்
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி, கோயிலின் அஸ்திவாரத்திற்குத் தேவையான தூண்களை அமைக்க அயோத்தியில் மணல் சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் தளர்வான மணல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கட்டுமானப் பணிகள் நிறுத்தம்
161 அடி உயரத்தில் கோயில் அமையவுள்ளதால் தூண்கள் வலுவாக அமைக்கப்பட வேண்டும். இருப்பினும், தளர்வான மணல் கண்டறியப்பட்டதால் தூண்களை அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலின் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
புதிய தொழில்நுட்பம்
இதைத்தொடர்ந்து கோயில் கட்டுமானம் குறித்த முடிவை எடுக்க டெல்லியில் நேற்று ராம் கோயில் கட்டுமான குழு ஆலோசனையில் ஈடுபட்டது. அப்போது பேசிய கட்டுமான குழு உறுப்பினர் அமித் மிஸ்ரா, "லார்சன் & டூப்ரோ மற்றும் டாடா கன்சல்டிங் நிறுவன பொறியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ராமர் கோயிலின் அடித்தளத்தை அமைக்கவுள்ளனர். அந்த புதிய தொழில்நுட்பத்தை விரைவில் எங்களுக்குப் பரிந்துரைப்பார்கள்" என்றார்.