பாஜக கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடுவைப் போல குட் பை சொல்கிறார் ராம்விலாஸ் பாஸ்வான்?
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும் விலகக் கூடும் என தெரிகிறது. பாஜக தம்முடைய தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என அக்கட்சிக்கு ராம்விலாஸ் பாஸ்வான் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. அகாலி தளமும் அதிருப்தியை காட்டியது. தெலுங்குதேசம் அதிரடியாக வெளியேறி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகிறது.
பாஜக மீது பாஸ்வான் அதிருப்தி?
சிக்கிம் ஜனநாயக முன்னணியோ மமதா பானர்ஜியுடன் கை கோர்த்துவிட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி தலைவருமான ராம்விலாஸ் பாஸ்வானும் பாஜக மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பாஜகவின் நிலை மாறனும்
இது தொடர்பாக பாஸ்வான் கூறியதாவது: தலித்துகள், சிறுபான்மையினர் தொடர்பான பாஜகவின் போக்கு மாற்றிக்கொள்ளப்பட வேண்டும். பாஜகவில் மதச்சார்பற்ற தலைவர்களே இல்லையா? அவர்கள் குரல் ஒடுக்கப்பட்டதாக இருக்கிறதே?
|
அதிர்ச்சி தோல்விக்கு காரணம்
பீகார், உத்தப்பிரதேச இடைத்தேர்தல்களின் போது வெறுப்பரசியல் பேச்சுகளை பாஜக தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் வெளிப்படுத்தினர். இதனால்தான் பாஜக அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
காங்கிரஸைப் போல இருக்க வேண்டும்
காங்கிரஸ் கட்சியால் நீண்டகாலம் மத்தியில் எப்படி ஆட்சியில் இருக்க முடிந்தது என்பதை பார்க்க வேண்டும். தலித்துகள், பிராமணர்கள், இஸ்லாமியர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆண்டு வந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.