ராப்ரி தேவியுடன் பாஸ்வான் திடீர் சந்திப்பு: காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி?
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா கட்சித் தலைவர் லாலு பிரசாத்தின் எம்.பி. பதவி நேற்று பறிக்கப்பட்டது. மேலும், சிறைத் தண்டனையை கழித்த பிறகு, அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடும் தகுதியையும் லாலு இழந்துவிட்டார்.
இந்நிலையில், பிகார் எம்.எல்.சி.யும் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவியை அவரது இல்லத்தில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராம் விலாஸ் பாஸ்வான், பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடனான உறவு வலுவாக உள்ளது. இங்கு நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் விளக்கமாக எடுத்துச் சொல்லியுள்ளேன்.
அண்மையில் சோனியாவை சந்தித்தபோது, எதிர்வரும் லோக்சபா தேர்தல் மற்றும் 2015ம் ஆண்டில் நடைபெறவுள்ள பீகார் மாநில சட்டசபை தேர்தலிலும் மதவாத சக்திகளைத் தோற்கடிக்கும் வகையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி போன்ற மதச்சார்பற்ற கட்சிகளுடன் ஓரணியில் காங்கிரஸூம் ஒன்றுதிரளவேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கு கொள்ளாத நிலையிலும் காங்கிரஸூக்கு உறுதுணையாக லோக் ஜன சக்தியும், ராஷ்ட்ரீய ஜனதா தளமும் இருந்துள்ளன என்றார்.
அப்போது உடனிருந்த ராப்ரி தேவி கூறியது: ராஷ்ட்ரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் ஓரணியில் திரளும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.