தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: ராம்விலாஸ் பஸ்வான் வலியுறுத்தல்
மும்பை: தனியார் துறை வேலை வாய்ப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வலியுறுத்தினார்.
இதுகுறித்து மும்பையில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசுகளின் சலுகைகளால் பயன்பெறும் தனியார் நிறுவனங்கள், தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
நாட்டில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தோரின் மக்கள் தொகைக்கேற்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
மேலும் திருத்தப்பட்ட புதிய நுகர்வோர் பாதுகாப்பு மசோதா தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தை நுகர்வோருக்கு உகந்ததாக மாற்ற மத்திய அரசு முயற்சிகளை எடுத்து வருவதாகவும். புதிய சட்டப்படி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் தரப்படும் என்றும் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.