ஆர்.எஸ்.எஸ்.-ன் இடஒதுக்கீடு எதிர்ப்பு பேச்சு, தாத்ரி சம்பவங்களே பீகார் தோல்விக்கு காரணம்- பாஸ்வான்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் படுதோல்விக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் இடஒதுக்கீட்டு எதிர்ப்பு பேச்சு, தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முஸ்லிம் பெரியவர் அடித்து கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களே அடிப்படை காரணமாக அமைந்தன என்று லோக் ஜனசக்தித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஸ்வானின் லோக் ஜனசக்தியும் இடம்பெற்றிருந்தது. ஆனால் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது பா.ஜ.க. அணி.
இத்தேர்தல் தோல்வி குறித்து முதல் முறையாக ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இதை மகா கூட்டணி கட்சிகள் தவறாக மக்களிடத்தில் பிரசாரம் செய்தன. பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தால் இடஒதுக்கீட்டையே ரத்து செய்துவிடுவார்கள் என பிரசாரம் செய்தனர். இது பா.ஜ.க. அணிக்கு தோல்வியாக அமைந்துவிட்டது.
அதேபோல் ஓ.பி.சி. மற்றும் எஸ்.சி. பிரிவு வாக்குகளை எங்கள் பக்கம் திருப்புவதிலும் தோல்வி அடைந்துவிட்டோம். பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா ஆகியோர் திட்டவட்டமாக இடஒதுக்கீட்டை ரத்து செய்யவே மாட்டோம் என கூறியிருந்த போதும் அது கை கொடுக்காமல் போனது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், குஜராத் இடஒதுக்கீட்டு பிரச்சனையை முன்வைத்து கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் லாலுவும் நிதிஷூம் அதை பீகாருக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் தாத்ரியில் முஸ்லிம் பெரியவர் படுகொலை செய்யப்பட்டது என்பது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை. அதையும் பீகார் தேர்தல் களத்தில் முக்கிய பிரச்சனையாக்கிவிட்டனர்.
பீகாரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு கிடைக்காது என பிரசாரம் செய்தனர். இதனால்தான் நாங்கள் தோற்கடிக்கப்பட்டோம்.
பீகாரில் மகா கூட்டணி 5 ஆண்டுகாலம் முழுமையாக ஆட்சி நடத்த முடியாது. எந்த ஒரு பெருவெள்ளமுமே 6 மாத காலத்துக்கு மேல் தாங்கப் போவதில்லை. பீகாரைப் பொறுத்தவரை சமூக நீதிப் பார்வை கொண்ட மாநிலம்... வந்தேறியா? பீகாரியா போன்ற பிரச்சனையெல்லாம் இந்த மாநிலத்தில் கிடையாது.
இவ்வாறு ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.