ராமர் கோவில் பிரச்சனையில் தலையிட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு உரிமை இல்லை... பாஜக நிர்வாகி காட்டம்
ராமர் கோவில் பிரச்சனையில் தலையிட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு எந்த விதமான உரிமையும் இல்லை என்று முன்னாள் பாஜக எம்பி ராம் விலாஸ் வேதாந்தி கூறியிருக்கிறார்.
லக்னோ: ராமர் கோவில் பிரச்சனையில் தலையிட ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு எந்த விதமான உரிமையும் இல்லை என்று முன்னாள் பாஜக எம்பி ராம் விலாஸ் வேதாந்தி கூறியிருக்கிறார். மேலும் ''ராமர் கோவில் சார்ந்த எந்த விதமான பிரச்சனையிலும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இதுவரை பங்கு பெறவில்லை அப்படியிருக்கையில் இப்போது மட்டும் அவரால் பிரச்சனையில் எப்படி தலையிட முடியும்'' என்று ராம் விலாஸ் வேதாந்தி கோவமாக பேசியிருக்கிறார்.
பாஜக கட்சியின் முன்னாள் எம்பி ராம் விலாஸ் வேதாந்தி உத்தரபிரதேசத்தில் இருக்கும் 'சாம்பால்' என்ற கிராமத்தில் நடந்த 'கல்கி உட்சவம்' என்ற நிகழ்வில் இன்று கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் ராமர் கோவில் பிரச்சனை குறித்தும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்தும் பேசியிருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறித்தும் பேசினார்.
சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு பேட்டியில் "எனக்கு நிறைய இந்து சாமியார்கள் மற்றும் முஸ்லீம் தலைவர்கள் ஆகியோருடன் நல்ல நட்பு இருக்கிறது. நான் பேசும்பட்சத்தில் ராமர் கோவில் பிரச்சனையை நீதிமன்றத்திற்கு வெளியில் சுமுகமாக பேசி தீர்க்க முடியும்'' என்று கூறியிருந்தார். தற்போது இவரது இந்த பேச்சுக்கு ராம் விலாஸ் வேதாந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதன்படி ராம் விலாஸ் வேதாந்தி பேசுகையில் "ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இதுவரை ராமர் கோவில் சார்ந்த எந்த பிரச்சனையிலும் ஈடுபட்டதே இல்லை. இதற்காக சிறைக்கு சென்றது நாங்கள், வழக்குகளை சந்தித்து நாங்கள். இந்த பிரச்சனை குறித்து பேச எங்களுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது. அவருக்கு எந்த தகுதியும் இல்லை." என்று கோவமாக கூறியிருக்கிறார்.
மேலும் அவர் இதுகுறித்து பேசும் போது "இந்த விஷயத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பேசுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களிடம் முஸ்லீம் தலைவர்கள் வந்து பேச வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம். இந்துக்களும், முஸ்லிம்களும் பேசிதான் இந்தப் பிரச்னையை தீர்க்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.