தீர்ப்பு வந்த ஒருவருடத்திற்குள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும்- வி.எச்.பி
விரைவில் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்படும் என்று வி.எச்.பி அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.
புவனேஷ்வர்: விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் சுரேந்திர ஜெயின் தெரிவித்து உள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்து அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கை. பல சர்ச்சைகள் இந்த விஷயத்தில் அடங்கி உள்ளன. இந்நிலையில் விரைவில் கோவில் கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று விஷ்வ இந்து பரிஷித் அமைப்பு தெரிவித்து உள்ளது. இதை அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுரேந்திர ஜெயின் தெரிவித்தார்.
விஷ்வ இந்து பரிஷித்தின் முக்கியத்தலைவர்கள் கூட்டம் இந்த மாத இறுதியில் நடக்க இருக்கிறது. மூன்று நாட்கள் ஒரிசா மாநிலம் புவனேஷ்வரில் வரும் நவம்பர் 27ம் தேதி ஆரம்பிக்கும் இந்த கூட்டத்தில் கோவில் கட்டும் முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்போவதாகவும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.
மேலும் இதுகுறித்து பேசிய சுரேந்திர ஜெயின், இனிமேலும் இந்த விஷயத்தில் நாங்கள் தாமதிக்கமாட்டோம். ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. புகழ்பெற்ற சிற்பி ஒருவரின் தலைமையில் மாதிரிக்கோவில் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இந்து தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.
மேலும் மதப்பிரச்னைகள், பசுவதை, லவ் ஜிகாத் ஆகிய பிரச்னைகளும் இதில் விவாதிக்கப்பட இருக்கின்றன. இந்துக்களைக் காப்பாற்ற சரியான நடவடிக்கை எடுக்காமல் சில மாநில அரசுகள் தவறி வருகின்றன. அவர்களைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றார்.
ஏற்கனவே பாபர் மசூதியை இடித்ததால் ஏற்பட்ட கலவரத்தின் சுவடுகளே இன்னும் மறையாத நிலையில் மீண்டும் ராமர் கோவில் விவகாரத்தை வைத்தே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மீண்டும் தனது இழந்த அரசியல் செல்வாக்கை திரும்பப் பெறவே பா.ஜ.க தனது இந்து அமைப்புகள் மூலம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறதோ என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.