யோகா 'ராம்தேவ்' அந்தர் பல்டி! மத்திய அமைச்சர்கள் மீது கடும் தாக்கு! ராகுலுக்கு ஆஹோ ஓஹோ பாராட்டு!!
டெல்லி: மத்திய பாரதிய ஜனதா அரசை ஆதரித்து வந்த யோகா குரு பாபா ராம்தேவ் திடீரென மத்திய அமைச்சர்களை மிகக் கடுமையாக வசைபாடியுள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார் ராம்தேவ்.
ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு ராம்தேவ் அளித்த பேட்டி:
வளர்ச்சி, விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசை காங்கிரஸ் கட்சி ஓரங்கட்டிவிட்டது. விவசாயிகளின் நம்பிக்கையை பெறும் வகையில் இனி மத்திய அரசு நடக்கவேண்டும்.
மோடிக்கு எதிராக 'சூட் பூட் கி சர்க்கார்' என ராகுல் கூறுகிறார்.. சூட் அணிந்து கொள்வதால் யாரும் குற்றவாளியாகி விடுவதில்லை. பா.ஜ.க.வின் வெற்றிக்காக உழைத்த பின் தங்கியவர்களுக்கும், தலித் மக்களுக்கும் கட்சிக்குள் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பலர் ஆணவக்காரர்களாக உள்ளனர். பிரதமர் மோடி, அருண் ஜெட்லி மற்றும் அமித் ஷா ஆகியோர் மட்டுமே முன்பு போல் ஒரே செல்போன் எண்ணை வைத்துக்கொண்டுள்ளனர். மற்ற அமைச்சர்கள் அனைவரும் தங்களது செல்போன் எண்களை மாற்றிவிட்டனர்.
அடுத்து வரும் தேர்தலில் மீண்டும் மக்களை சந்திக்க வரவேண்டிய அவர்கள், தங்களது செய்கைகளை உடனடியாக கைவிடவேண்டும்.
இவ்வாறு ராம்தேவ் கூறினார்.